கோவை மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி.யின் திடீர் சோதனையால் பரபரப்பு
கோவை: நேற்றிரவு ஏ.டி.ஜி.பி திரிபாதி கோவை மத்திய சிறையில் கைதிகளின் அறைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். சோதனையில் விரும்பத்தகாத பொருட்கள் எதுவும் கைதிகள் வசமிருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்ட கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடமிருந்து பீடி, கஞ்சா, செல்போன்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு இடையே மோதல், தற்கொலை மற்றும் பல விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன.
இவற்றிற்கு தீர்வாக, ஜெயில் சூப்பிரண்டு ராஜேந்திரன் கைதிகளுக்கு யோகா, காலை, மாலையில் விளையாட்டு, வாரந்தோறும் சினிமா போன்ற பல்வேறு பொழுது போக்கு நடவடிக்கைகளில் கைதிகளை ஈடுபடுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில், கோவை வந்த சிறை துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி தடாலடியாக மத்திய சிறைக்குச் சென்றார். முன் அறிவிப்பின்றி, சிறை முழுவதும் சென்று, கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகள் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பீடி , கஞ்சா முதலான தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கைதிகள் வசம் உள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட நள்ளிரவு 1 மணி வரை இச்சோதனை நடைபெற்றது. ஆனால், இதில் எந்தவிதமான தடை பொருட்களும் கைதிகளிடம் இருந்து சிக்கவில்லையாம்.
சோதனைக்குப் பிறகு இரவு முழுவதும் சிறையிலேயே கழித்த திரிபாதி, காலையில் சிறை வளாகத்தில் புதிதாக பெண்கள் சிறை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், திரிபாதி தலைமையில், திருப்பூரில் கட்டப்பட உள்ள திருப்பூர் மாவட்ட ஜெயில் குறித்தும் தர்மபுரி மாவட்ட ஜெயில் குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.