அயோத்திக்குப் போக மறுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!
கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கணிசமாக இடங்களைக் கைப்பற்றுவதற்கான வியூகத்தை வகுத்து செயல்படுத்தத் தொடங்யுள்ளார் மோடி. முதல் கட்டமாக மோடியின் நண்பரும் உத்தரப்பிரதேச மாநில பாஜக பொறுப்பாளருமான அமித் ஷா, உடனடியாக அங்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டு கட்சி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராஜ்ம்ஜென்ம பூமி இயக்கத்தின் தலைவரான மகந்த் நிரித்ய கோபால் தாஸின் 75வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் சங்க பரிவார அமைப்புகளும் பாஜக தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. இதில் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்படி மோடி கலந்து கொள்ளும் நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் வழிபாடு நடத்தி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்க வைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டது விஷ்வ ஹிந்து பரிஷத்.
ஆனால் இந்தத் திட்டத்துக்கு நரேந்திர மோடி இணக்கம் தெரிவிக்கவில்லை. இப்படி அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தினருடன் அடையாளப்படுத்திக் கொண்டால் உத்தப்பிரதேச மாநிலத்திலும் தேசிய அளவிலும் அனைத்து தரப்பு வாக்குகளையும் பெற முடியாமல் போகும் என்று மோடியின் கருதுவதாகத் தெரிகிறது. இதனாலேயே அயோத்திக்குப் போகும் திட்டத்தை அவர் கைவிட்டதாக தெரிகிறது.
இந் நிலையில் அயோத்திக்கு மோடியை அழைக்கவே இல்லை என்று கூறியுள்ளது வி.எச்.பி.