தாம்பூலப் பையில் அசத்திய விவசாயி: சாத்துக்குடி, தேங்காய்க்குப் பதில் 2 கிலோ விதை நெல்!
திருவாரூர்: திருமணத்தை வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கு தாம்பூலப்பையில் விதை நெல்லைக் கொடுத்து அசத்தியுள்ளார் திருவாரூர் விவசாயி ஒருவர்.
திருவாரூர் மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்த, லெட்சுமணன் காவிரி விவசாய பாதுகாப்புச் சங்க துணை செயலராகவும் உள்ளார். இவரின் மகளின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இருமணங்கள் இணையும் திருமண விழாவிற்கு வருகை தந்து, மணமக்களை வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு தாம்பூலப் பை கொடுத்து மரியாதை செலுத்துவது தமிழர் பண்பாடு.
தமிழ் விவசாயியான லெட்சுமணன், தன் மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கு வித்தியாசமாக, அதே சமயம் உபயோகமாக ஏதாவது தர வேண்டும் என யோசித்ததன் விளைவு தான் இந்த விதை நெல் தாம்பூலப்பையாம்.
தாம்பூலப் பையில் சாத்துக்குடி, தேங்காய் போன்றவைகளுக்குப் பதிலாக, லெட்சுமணன், பாரம்பரிய நெல் விதைகளான, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா மற்றும் கவுனி என, நெல் விதைகளை, பேக் செய்து வழங்கியுள்ளார். இத்தகைய புது விதமான தாம்பூலப் பையால், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்துக்களோடு, ஆச்சர்யமும் தெரிவித்தனர். இரண்டு கிலோ நெல் பையை சுமார் 867 விருந்தினர்களுக்கு கொடுத்தாராம் லெட்சுமணன்.
இது குறித்து, ‘நம் நெல்லை காப்போம்' மாநில ஒருங்கிணைப்பாளர், ஜெயராமன் கூறியதாவது, ‘திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை நெல் போதுமானது; ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை. மறு சாகுபடிக்கும், இந்த விதை நெல்லை பயன்படுத்த முடியும்' என்றார்.