செங்கலுக்குப் பதில், பிளாஸ்டிக் பாட்டில்...: ‘புது டெக்னிக்’ வீடு கட்டும் பொலிவியா மக்கள்
சக்ரி: தண்ணீர், ஜூஸ் அல்லது சரக்கு வாங்கும் பாட்டிலை காலியானதும் நாம் என்ன செய்வோம்?
இதென்னங்க கேள்வி, அத வச்சு வீடா கட்ட முடியும், தூக்கி குப்பைல தான் எறியணும் என பதில் சொல்பவரா நீங்கள். அப்ப, உங்க பதில நீங்க மாத்திக்கோங்க. ஆமாங்க, பழைய பாட்டிலை வைத்து பொலிவியாவில் உண்மையிலேயே வீடு கட்டுகிறார்கள்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், செங்கலுக்குப் பதில் பழைய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டி அமர்க்களப் படுத்தி வருகின்றனர்.
வறுமையின் பிடியில் மக்கள்...
இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் வறுமையின் கோரத் தாண்டவம் அதிகம். இங்கு வாழும் 50 சதவீதம் மக்கள் ஏழைகள் தானாம்.
கோப்பையிலே ஒரு குடியிருப்பு...
அத்தகைய ஏழை மக்கள் குடியிருக்க வீடு கூட இல்லாமல் அவதிப் படுகின்றனராம். அவர்களுக்கு வீடு கட்டித் தருவதே பெரிய சவாலாக இருப்பதால், புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளார் இன்கிரிட் வாகா டியாஸ் என்றப் பெண்.
பாட்டில் வீடு...
பொலிவியாவில் உள்ள சாண்டாகுரூஸ் நகரில் வசித்து வரும் வாகா டியாஸ் , அந்நகரத்து மக்களுக்கு குறைந்த செலவில் வீடு கட்டித் தர முடிவு செய்து கண்டறிந்த யுக்தியே, இந்த பிளாஸ்டிக் பாட்டில் வீடு.
குப்பையில் கோமேதகம்...
வீணான குப்பை என்று மக்கள் தூக்கி எறியும் பழைய பாட்டில்களை சேகரிக்க ஆரம்பித்தார் வாகா. அதில் மணலை நிரப்பி, செங்கலுக்குப் பதிலாக பயன்படுத்தி கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தார்.
குறைந்த செலவில் நிறைவான தரம்....
பொலிவியாவில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி அசத்தியுள்ளாராம் வாகா. குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் இந்த வீடுகள் இருப்பதாக பெருமையுடன் சொல்கிறார் வாகா.