பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை கூட்டணி தொடரும்: சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே
மும்பை: பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை அதனுடனான கூட்டணி நீடிக்கும் என்று சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதையடுத்து உத்தவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சிவ சேனாவுடனான கூட்டணி தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாஜக இந்துத்துவாவை பின்பற்றும் வரை இந்த கூட்டணி நீடிக்கும் என்று நான் தெரிவித்தேன். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எந்த மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்? காஷ்மீரில் இருந்து பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டபோது மதச்சார்பின்மை பற்றி பேசுபவர்கள் எங்கே போனார்கள்? இந்துக்கள் பிரச்சனையில் இருக்கையில் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்?
ஒவ்வொரு கிராமத்திலும் சிவ சேனா குழு இருக்க வேண்டும். அதை பார்த்துவிட்டு பெண்களுக்கு தொல்லை அளிப்பவர்கள் மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இனியும் அந்த குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதை உணர வேண்டும் என்றார்.