குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பு: 13 மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம்
குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையோர மணல் கொள்ளை, வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் கடலைச் சூறையாடியதன் விளைவால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலோர கிராமங்களில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்புகளை இழுத்துச் செல்கின்றன. அலையின் வேகத்தினால் கடலரிப்பு தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து கடலில் விழுந்து கிடக்கிறது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிபுத்தன்துறையில் 7 மீன் பதனிடும் நிலையங்கள் கடலுக்குள் இடிந்து விழுந்தன. இரவிபுத்தன்துறை-வள்ளவிளை சாலை 200 மீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்டுள்ளது.
தூத்தூர், பூத்துறைக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்த ஏராளமான தென்னை மரங்கள் கடல் அரிப்பால் வேரோடு கடலில் சாய்ந்தன. அரையன்தோப்பு அலை தடுப்பு சுவர், ராமன்துறையில் தடுப்பு சுவர் சேதம் அடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. தேங்காப்பட்டணம், இனயம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.