சாலை விபத்தில் மாணவர்கள் பலி: சீமான் இரங்கல்
சென்னை: பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 மாணவர்களும், வாகன ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அனைவரும் 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதைக்கிறது.
மாணவர்களை பறிகொடுத்துத் தவிக்கிற குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவச பேருந்து பயண அட்டைகளை (பஸ் பாஸ்) அளித்துள்ளது. ஆனால், எங்கெல்லாம் மாணவர்கள் அரசு பேருந்துக்காக திரண்டு நிற்கின்றனரோ அங்கு நிறுத்தாமல் அரசு பேருந்துகள் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தான் மாணவர்கள் பள்ளிக் குச்செல்ல ஷேர் ஆட்டோக்களிலும், இப்படிப்பட்ட வாகனங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.