அகதிகள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: ஏஞ்சலீனா கோரிக்கை
ஜோர்டான்: ஜூன் 20, இன்று சர்வதேச அகதிகள் தினமாக உலக நாடுகள் அனுசரிக்கின்றன. ஐ.நா. சபை மனித உரிமை குழுவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி(38) ஜோர்டான் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளைச் சந்தித்தார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் லட்சக்கணக்கான சிரிய மக்கள் துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவின் சிறப்புத்தூதர் ஏஞ்சலினா ஜோலி,ஜோர்டனில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்கு நேற்று சென்றார். அங்குள்ள அகதிகளைச் சந்தித்து அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய ஏஞ்சலீனா, '21ம் நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவும், மனிதநேய மீறலும் சிரியாவில் நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய பேரழிவிற்கு சர்வதேச சமுதாயம் அளித்து வரும் நிவாரணம் மிகவும் சொற்பமாக உள்ளது. மனித நேய அடிப்படையிலான மேலும் பல உதவிகள் தேவைப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்' என்றார்.
சென்ற மாதத்தில், புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளானதால் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆனபோதும், ஓய்வில் இல்லாமல், அகதிகளைச் சந்திப்பதற்காக அவர் நேற்று ஜொர்டான் சென்றது குறிப்பிடத்தக்கது.