2012ல் மட்டும் 76 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்: ஐ.நா ‘திடுக்’ அறிக்கை
நியூயார்க்: இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகின்ற நேரத்தில், சமீபத்தில் ஐ.நா உலக அகதிகள் குறித்த அறிக்கை திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்ற வருடம் மட்டும் 76 லட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம், சமீபத்தில் அகதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகின் பல நாடுகளில் நடைபெறும் போரினால் நிறைய மக்கள் அகதிகளானது தெரிய வந்துள்ளது.
76 லட்சம் அகதிகள்...
அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 76 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனராம். அதிலும், 1994-ம் ஆண்டுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் அகதிகளாக இருப்பது சென்ற ஆண்டில் தானாம்.
ஐந்து நாட்டின் அகதிகள்...
76 லட்ச அகதிகளில், 55 சதவீத அகதிகள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் முதலிடம்...
கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் தான், அகதிகள் எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டின் அகதிகள் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
சோமாலியா இரண்டாமிடம்...
அகதிகள் விஷயத்தில் இரண்டாவது இடத்தில் சோமாலியாவும், மூன்றாவதாக ஈராக்கும் உள்ளது. இது ஐ.நா.அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.