உஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம்
டெல்லி: சேமிப்பு விவரங்களை வெளியிட்டு ‘திறந்த புத்தகமாக' மாறியதன் விளைவாக, சுவிஸ் வங்கியில், இந்தியர்களின் சேமிப்பு இந்த ஆண்டு ரூ.9000 கோடியாக குறைந்ததுள்ளது.
நம்ம சிதம்பர ரகசியம் மாதிரி, உலக ரகசிய வங்கியாக இருந்தது சுவிச் வங்கி. அங்கு உலக பணக்காரர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் தங்களது கணக்கில் வராத பெரும் தொகைகளை வைப்பு நிதியாக மறைத்து வைத்திருந்தனர்.
இதில் இந்தியர்களும் அடக்கம். இந்நிலையில், தனது ரகசிய கணக்குகளை அம்பலப்படுத்தியது சுவிஸ் வங்கி. அதன் மூலம், பல்வேறு கேள்விகளுக்கு ஆளான பணக்காரர்கள் தற்போது சுவிஸ் வங்கியில் பணம் சேமிப்பதைக் குறைத்து வருகின்றனர். சுவிஸ் வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு சுமார் ரூ.156 லட்சம் கோடி மொத்த வைப்புத்தொகை இருந்தது. ஆனால் இப்போது அது 60 லட்சம் கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வருடம் இந்தியர்கள் 9,000 கோடி ரூபாய் வைப்பு மற்றும் சேமிப்பு தொகையாக செலுத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 35 சதவிகிதம், அதாவது கிட்டத்தட்ட 4,900 கோடி ரூபாய் குறைவு.
சுவிஸ் வங்கி வரலாற்றிலேயே, இந்தளவுக்கு மிகக் குறைவாக இந்தியர்கள் பணத்தை சேமிப்பு செலுத்தியிருப்பது இது தான் என வங்கி நிர்வாகம் ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.