’இமயமலை சுனாமி’ நிவாரண நிதிக்கு ரூ 13 லட்சம் கொடுக்கும் திகார் ஜெயில்வாசிகள்
டெல்லி: உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திகார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், ‘இமயமலை சுனாமி' என அழைக்கப்படும், கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உதவ, நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.
மேலும், பொதுமக்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில், பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், திகார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறையின் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறியதாவது, "உத்தரகாண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறையில் உள்ள கைதிகள் 5 லட்சம் வசூலித்துள்ளனர். இதேபோல் சிறை ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வசூலாகும். மொத்தம் 13 லட்சம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக, முதல்வர் ஷீலா தீட்சித்திடம் ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார்.