’இமயமலை சுனாமி’யில் சிக்கிய யாத்ரீகர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை
டெல்லி: உத்தரகாண்ட் பேரழிவில் சிக்கிய வெளி மாநில யாத்ரீகர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்ப கட்டணமின்றி, இலவசமாக ரயிலில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது அம்மாநில ரயில்வே.
சில நாட்களுக்கு முன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை இதுவரை சரியாக கணக்கிடப்படவில்லை.
வெள்ளத்தில் மற்றும் மண்சரிவில் சிக்கியவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலவாசிகளே ஆவர். இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து புனித தலங்களுக்கு யாத்திரை வந்தவர்கள். வந்த இடத்தில் ஆபத்தில் மாட்டிக் கொண்டார்கள். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்கும் பணி ராணுவத்தினரால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவ்வாறு, மீட்கப்பட்ட வெளிமாநில யாத்ரீகர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து வாடும் அம்மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்லும் ரயில் கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது.
இத்தகவலை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி மணீஷ் திவாரி அறிவித்துள்ளார். டேராடூனில் இருந்து டெல்லி, அம்பாலா, லக்னோ ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளச் சேதாரத்தினால் அப்பகுதியில் 200 தொலைத் தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்யும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.