ராஜ்யசபா தேர்தல்..7 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விஜயகாந்த் ஆதரவு கோரி கடிதம்!
வரும் 27-ந் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் போட்டியிடுகின்றன. இதனால் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்திருக்கிறது. மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை திமுகவை ஆதரித்துள்ளன. காங்கிரஸிடம் திமுக, தேமுதிக ஆதரவு கோரியுள்ளன.
இந்நிலையில் தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை வளைக்க திமுக, தேமுதிக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்எல்.ஏ.க்கள் ஏழு பேருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் கடந்த 16ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்ஏ.க்கள் கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் கட்சியின் பொருளாளர் இளங்கோவன் கடந்த 17ந் தேதி மனுத் தாக்கல் செய்திருக்கிறார். எனவே, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் கடமை. எம்.எல்.ஏ க்கள் தவறாமல் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.