உத்தரகாண்ட் வெள்ளச்சேதம்: காஞ்சி சங்கரமடம் ரூ.20 லட்சம் நிவாரண உதவி
காஞ்சிபுரம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சார்பினால், முதல் கட்டமாக பிரதமர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் காசோலையும், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களும், சேலைகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கினால் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம். இந்த வெள்ளத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற பக்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பத்திரமாக தமிழக அரசு திரும்ப அழைத்து வந்துள்ளது.
பல்வேறு இடர்பாடுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், சங்கர மடத்தின் சார்பினால் நிவாரண உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீசங்கர மடத்தின் சார்பில், பிரதமரின் நிவாரன நிதிக்கு ரூ.20 லட்சமும், உணவு மற்றும் உடைகளும் முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
பொது மக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக நிவாரண உதவி வழங்க வேண்டும். அந்த உதவிகள் சங்கர மடத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்றடைய ஏற்பாடு செய்யப்படும்.
பொருட்கள் அளிக்க விரும்புவோர், காஞ்சீபுரம், சென்னை, கோவை, கும்பகோணம், திருநெல்வேலி, ஐதராபாத், லக்னோ, வாரணாசி, விஜயவாடா, விசாகபட்டினம், மும்பை, பெங்களூர், புதுடெல்லி, கல்கத்தா, புனோ ஆகிய இடங்களில் உள்ள சங்கர மடங்களில் ஒப்படைக்கலாம்.
தர்ம போதனா டிரஸ்ட்
பண உதவி செய்ய விரும்புவோர், "தர்ம போதனா டிரஸ்ட்" என்ற பெயருக்கு, காசோலையாகவோ அல்லது வரைவு காசோலையாகவோ ஜே.சீதாராமன், உத்தரகாண்ட், நிவாரண பணி ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், 1, சாலை தெரு, காஞ்சீபுரம்- 631502 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
பணமாக கொடுக்க விரும்புவோர், காஞ்சீபுரம் சங்கரமடம், இந்தியன் வங்கி கிளையில் "தர்மபோதனா டிரஸ்டின்" 414552252 என்ற சேமிப்பு கணக்கு எண்ணில் செலுத்தலாம்.