நாட்டின் தலைமையை நரேந்திர மோடி ஏற்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்
மாதேபூர்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாட்டின் தலைமையை ஏற்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணியின் கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பங்கேற்ற முதலாவது பொதுக்கூட்டம் இது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரகாஷ் சிங் பாதல், குஜராத் முதல்வராக உள்ள மோடி இனி நாட்டுக்குத் தலைமையேற்க வேண்டும். பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும் என்ற நம்பிக்கைக்கு உயிர் கிடைத்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நரேந்திர மோடிக்கு உறுதியளிக்கிறேன். மத்திய அரசின் நடவடிக்கையால் உள்நாட்டிலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எல்லையிலும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார் அவர்.
பாஜகவின் தேசிய பிரசாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதை எதிர்த்து 17 ஆண்டு கால கூட்டணி உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. ஆனால் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளமோ முழு ஆதரவை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.