கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கி 3 நாள் பஸ்சிலேயே முடங்கிக் கிடந்த பெண்
நாசிக்: கேதார்நாத் பயணத்தின்போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாசிக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் பஸ்சுக்குள் சிக்கி 3 நாட்களாக அங்கேயே பீதியுடன் கழித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட அப்பெண் தற்போது சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார். இன்னும் பதட்டத்திலிருந்து மீளாமல் உள்ள அப்பெண்ணின் பெயர் பிரியா பாகல். இவர் நாசிக்கின் ஆர்டிஓ காலனியைச் சேர்ந்தவர்.
தனது அனுபவம் குறித்து பிரியா கூறுகையில், அப்போது கன மழை பெய்து கொண்டிருந்தது. பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. கடல் கொந்தளித்து வந்தது போல வெள்ளம் வந்ததைப் பார்த்து எனக்கு மூச்சே நின்று போய் விட்டது.
எங்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் பஸ்சுக்குள்ளேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. கையில் இருந்த பிஸ்கட்களை வைத்து 3 நாட்களை நாங்கள் கழித்தோம். செல்போன்கள் செயல்படவில்லை. இதனால் தகவல் தொடர்பும் இல்லை.
பின்னர் உள்ளூர் அதிகாரிகள் எங்களை மீட்டு அபயம் அளித்தனர். குடிநீர் உள்ளிட்டவற்றை நாங்கள் மிகவும் அதிக விலை கொடுத்த வாங்க நேரிட்டது. அங்குள்ள மக்களும் எங்களுக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்றார்.