உத்தர்காண்ட் வெள்ளம்... 2 நாள் மோடி முகாம்! 15,000 குஜராத்தியர்கள் மீட்பு!!
டேராடூன்: உத்தர்காண்ட் மாநில பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அங்கு முகாமிட்டிருந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி.
இந்துக்களின் புனித யாத்திரையாக கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு சென்ற யாத்ரீகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்கள் தவியாய் தவித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு உத்தர்காண்ட் மாநிலம் டேராடூன் சென்றார் குஜராத் முதல்வர். அவர் தம்முடன் அதிகாரிகள் குழுவையும் அழைத்துச் சென்று அதிகாலை 1 மணி வரை ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹரித்வாரில் உள்ள மடங்கள் மூலமாக தற்காலிக முகாம்கள் அமைத்து பரிதவித்த குஜராத்தியர்களை மீட்கும் பணி நடைபெற்றது. 80க்கும் மேற்பட்ட டயோட்டா இன்னோவா வாகனங்கள் மூலம் பரிதவித்தோர் டேராடூன் கொண்டவரப்பட்டனர். இதேபோல் 25 சொகுசு பேருந்துகள் மூலம் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஹரித்வார் மற்றும் டெல்லியில் குஜராத் அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர்.
குஜராத் முதல்வர் மோடி வெற்றிகரமாக ஒரு சிறு நிர்வாகக் கட்டமைப்பை பேரிடர் காலத்தில் உருவாக்கி உடனடி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில் அதெப்படி மோடியால் 15 ஆயிரம் பேரை மீட்டிருக்க முடியும்.. அத்தனை ஆயிரம் பேரை தங்க வைக்க உத்தர்காண்ட்டில் எங்கு இடம் இருக்கிறது? மோடி தவறான தகவல்களை பரப்புகிறார் என்று மத்திய அமைச்சர் அஜய் மக்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேதார்நாத் புதுப்பிக்க உதவுகிறோம்- மோடி
இதனிடையே பெருவெள்ளத்தால் நிலைகுலைந்து போய் கிடக்கும் கேதார்நாத் ஆலயத்தைப் புதுப்பிக்க தாம் உதவுவதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்தகைய இயற்கை சீற்றங்களால் எந்த ஒரு ;பாதிப்பும் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த கோயிலைப் புதுப்பிக்கலாம் என்றும் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.