கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்து தொங்கி, பிணங்கள் மேல் நின்று உயிர் பிழைத்த நபர்
டேராடூன்: கேதர்நாத் கோவில் மணியை பிடித்துக் கொண்டு பிணங்கள் மேல் நின்று ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தெஹ்ரியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் நெகி(36) கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
இது குறித்து அவரின் மைத்துனர் கங்கா சிங் பந்தாரி கூறுகையில்,
நெகி உயிர் பிழைத்து வந்ததே ஒரு அதிசயம். இறந்தவர்கள் நெகியின் உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கேதர்நாத் கோவில் மணியைப் பிடித்து தொங்கியுள்ளார். கழுத்தளவு நீரில் தொங்கிய அவர் இறந்தவர்களின் பிணங்கள் மீது நின்று பேலன்ஸ் செய்துள்ளார். நீரின் வேகத்தில் அவரது ஆடைகள் கூட கிழிந்துவிட்டன. ஆனால் அவர் எப்படியோ தாக்குபிடித்துவிட்டார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது நெகி தண்ணீரில் குதித்து கேதர்நாத் கோவிலுக்கு சென்றுவிட்டார். கோவிலுக்குள் நூற்றுக்கணக்கான பிரேதங்கள் மிதந்ததைப் பார்த்துள்ளார்.
9 மணிநேரம் மணியைப் பிடித்து தொங்கிய அவரின் கைகள் வலுவிழந்துவிட்டன. பேலன்ஸ் செய்ய அவர் மிதந்த பிணங்களின் மீது நின்றுள்ளார். தண்ணீர் சற்று குறைந்தவுடன் அவர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று அங்கு 2 நாட்கள் தவித்துள்ளார். அதன் பிறகே ராணுவ ஹெலிகாப்டர்கள் அவரை மீட்டன.
அவர் உயிருடன் வந்ததைப் பார்த்து அவரது குடும்பத்தார் ஆனந்த கண்ணீர் விட்டனர். கடவுளின் அருளால் சாவின் விளிம்பு வரை சென்ற அவர் பத்திரமகா வந்துள்ளார் என்றார்.