தமிழகத்தில் ராணுவப் பயிற்சி.. கோத்தபயாவும், ராணுவ செய்தித் தொடர்பாளரும் மாத்தி மாத்தி பேச்சு
இலங்கை ராணுவ வீரர்கள் இருவரையும் வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியிலிருந்து வேறு ஊருக்கு மாற்றுவது குறித்து இந்தியத் தரப்பிலிருந்து யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் இருவரும் முரண்பாடான முறையில் பேசியுள்ளனர்.
முதல் கருத்து
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு இரு வீரர்களையும் அனுப்ப இந்தியா முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதுகுறித்து இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரூவன் வனசூர்யா என்பவர் கூறுகையில், செகந்திராபாதில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இலங்கை வீரர்களை பயிற்சிக்கும் அனுப்பும்படி இந்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இலங்கை வீரர்கள் இருவரும் மிகவும் இளைய வயதினர். செகந்திராபாத் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற தகுதி உடையவர்கள் இல்லை. எனவே அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும்படி இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
கோத்தபயா சொல்லும் கருத்து என்னவென்றால்..!
இந்த நிலையில் கோத்தபாய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், இன்னொரு பயிற்சிக் கல்லூரிக்கு இலங்கை படை அதிகாரிகளை இடம்மாற்றும் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் இணங்காது. படை அதிகாரிகள் ஒரு ஆண்டு பயிற்சி நெறியை வெலிங்டனில் தொடர முடியாமல் போனால், அவர்களை இலங்கை பெரும்பாலும் திருப்பி அழைக்கும்.
விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இந்திய -இலங்கை உறவுகளைக் சீர்குலைக்க முனைகின்றன. பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நேரத்தில், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இலங்கை படை அதிகாரிகளுக்கு கதவடைக்கப்படுவது மோசமான பின்னடைவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பயிற்சி பெறுவதற்கே இத்தனை டெர்ம்ஸ் அன்ட் எச்சரிக்கைகள். இதையும் கேட்டுக் கொண்டு கம்மென்றிருக்கிறது இந்திய அரசு. காலக்கொடுமைதான்....