திவீரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்: பாஜக
டெல்லி: ஸ்ரீநகர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அச்சம்பவத்திற்கு மத்திய அரசின் தவறே காரணம் என குற்றம் கூறியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.
நேற்று, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களைத் தாக்கிய சம்பவத்தில் 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 13 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகளின் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு காரணம் அரசு தீவிரவாதிகளின் மீது கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்கும் அணுகுமுறையே என குற்றம் சாட்டியுள்ளது பாரதீயஜனதா கட்சி.
மேலும், இதுகுறித்து பாரதீய ஜனதா ஊடகப்பொறுப்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்ததாவது, ‘தீவிரவாதத்தினை கடுமையான சட்டப்படியே அணுக வேண்டுமென நாங்கள் எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறோம். இதில் பொடோ சட்டத்தைக்கூட நாங்கள் ஆதரித்து இருக்கிறோம். அரசியலுக்கு அப்பால் தீவிரவாதத்தின் மீது ஒரு தேசியக்கொள்கை இருக்கவேண்டும்.
திவீரவாதிகளுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்ளவேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக களையப்பட வேண்டும். அமர் நாத் யாத்ரீகர்களுக்கு தேவையான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.