போலீசாருக்கு மரணத்தை தரும் மன அழுத்தம்: தமிழகம் முதலிடம்!
டெல்லி: பணியில் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் காவல்துறையினர் உயிரிழப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி)யின் 2012ம்ஆண்டு புள்ளி விவரப்படி தென் மாநிலத்தில் காவலர்கள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இதில் 58 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 60 காவலர்கள் சாலை விபத்துக்களில் இறந்தனர்.
தமிழ்நாடு முதலிடம்
பணியில் ஏற்படும் மனஅழுத்தம், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலினாலும் தமிழகத்தில் அதிக அளவில் போலீசார் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா 2 வது இடம்
இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் 238 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில் 47 காவல்துறை அதிகாரிகள் சாலை விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.
கர்நாடகா, கேரளா
கர்நாடகத்தில் 201 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 65காவலர்களும் வேலை நெருக்கடியில் இறந்துள்ளனர். இதில் கர்நாடகாவில் 14 பேரும் கேரள மாநிலத்தில் 2காவலர்களும் சாலை விபத்துக்களில் உயிரிழந்திருக்கிறார்கள்.
மனஅழுத்தம் அதிகம்
தற்கொலை மற்றும் சாலை விபத்துக்களைத்தவிர இயற்கை மரணமடைந்த காவலர்களின் வயதை ஆய்வு செய்யும்போது அது கவலை அளிப்பதாக உள்ளது. மூத்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் இதர காவலர்கள் 162பேர் தமிழகத்தில் இயற்கையாக இறந்திருக்கிறார்கள். இதில் 82பேர் 45-55வயதுக்கு உட்பட்டவர்கள் மேலும் 42பேர் 35-45வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
உயர் ரத்த அழுத்தம்
மன அழுத்த பிரச்சனை முக்கியக் காரணமாக உள்ளது. இதனால் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் அல்லது தற்கொலை உயரிழப்புகள் ஏற்படுகின்றன "என்று மனநலமருத்துவர் சி.ராமசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
பணி நேரம் கிடையாது
காவல் துறையினருக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. இதனால் உரிய நேரத்தில் சாப்பிடுவது இல்லை. அதுபோன்று தூங்குவதிலும் ஒரு ஒழுங்கு இல்லை.அவர்கள் அரிதாக குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. பண்டிகை காலங்களிலும் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மதுப்பழக்கம் அதிகம்
காவலர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட தடைகளை கடந்து வரமுடிவதில்லை. இதனால் மதுபழக்கத்திற்கு ஆளாகிறார்கள். மன நெருக்கடி மற்றும் மதுபான பழக்கம் உயிரிழப்பு நிலைக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
கவுன்சிலிங் அவசியம்
காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதோடு உரிய ஆலோசனை அளிப்பதன் மூலம் மனநெருக்கடியில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் காவல்துறையினர் தற்கொலை, மனஅழுத்தத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.