கங்கை, யமுனையில் மிதக்கும் சடலங்கள்: டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவு
லக்னோ: உத்தரகாண்ட் பேரழிவில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் கங்கையில் மிதந்தவண்ணம் செல்கின்றன. அழுகி, உருக்குலைந்த நிலையில் காணப்படும் அவ்வுடல்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை நடத்த உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் கொட்டிய கனமழையால், நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்தப் பேரழிவில் சிக்கினர்.
இன்னும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இமயமலை சுனாமியில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். சேறுகளில் சிக்கியும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போய் விட்டன.
மிதக்கும் உடல்கள்...
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியான பக்தர்களின் உடல்கள் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை ஆறுகளில் மிதந்த வண்ணம் செல்கின்றன.
பிரேத பரிசோதனை...
அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து போன அந்த உடல்களை உத்தரபிரதேச அரசு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறது.
மாற்று யோசனை...
சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதால் மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி, அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.
டி. என்.ஏ சோதனை...
முதல் கட்டமாக, மிதந்து வரும் உடல்கள் புகைப்படம் எடுக்கப்படுகின்றன. பின்னர், அந்தச் சடலங்கள் மரபணு மாதிரிகள் சேகரித்து பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம், இறந்தவரைப் பற்றிய விவரங்களை பெறுவது எளிதாகும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலவச தொலைத் தொடர்பு வசதி...
அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவின்படி, ரிஷிகேஷ், ஹரித்துவார் பகுதிகளில் ஜாலிகிராண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த பந்தங்களை இலவசமாக தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
நிவாரண நிதி...
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிற்றுண்டி, உணவு பொட்டலங்கள், மருந்துகள் தொடர்ந்து வழங்கி வருகிறது அம்மாநில அரசு. உலகம் முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகளும் குவிந்த வண்ணம் உள்ளன்.