''சிசிடிவி கேமரா இருந்தாதான கண்காணிப்பீங்க.. ஆட்டையைப் போட்டுட்டா??''
நாமக்கல்: கல்லூரியில் மாணவர்களைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த ரகசிய சிசிடிவி கேமராவால் கடுப்பாகிப் போன சில மாணவர்கள் அந்த கேமராவையே திருடிக் கொண்டு போய் விட்டனர்.
நாமக்கல் எருமப்பட்டியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு மாணவர்களைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த 7 சிசிடிவி ரகசியக் காமராக்கல், 2 ஆண்டனாக்கள், ஒரு அடாப்டர் ஆகியவற்றை செட்டோடு சிலர் திருடிக் கொண்டு போய் விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் 3 பேருக்கும், கடந்த ஆண்டு படிப்பு முடித்து வெளியே சென்ற தசரத் ஜீமா என்ற இன்னொரு மாணவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
நான்கு பேரும் கல்லூரி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார் காமராக்களையும், மற்றவற்றையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.