எதிர்ப்பு எதிரொலி: இலங்கை ராணுவ அதிகாரிகள் வெலிங்டனில் இருந்து வெளியேற்றம்
சென்னை: தமிழ்ஆர்வலர்கள், அரசியல்கட்சியினரின் போராட்டத்தை அடுத்து வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இருந்த இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவர் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு வார காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சி முகாமில் இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் வெலிங்டன் ராணுவ முகாம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், வெலிங்டன் ராணுவ பயற்சி முகாமை இன்று முற்றுகையிட போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து ராணுவ பயிற்சி முகாமில் இருந்த இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுக்கூட்டமாக மாற்றம்
இலங்கை ராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டதை அடுத்து மதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் கண்டன பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.