உத்தரகண்டில் இருந்து மேலும் 52 பேர் சென்னை திரும்பினர்
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 52 யாத்ரிகர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.
தமிழ்நாட்டில் இருந்து கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புனித தலங்களுக்கு ‘சார் தாம் யாத்திரை' சென்ற பக்தர்கள் ஹிமாலய சுனாமி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
உணவும், இருப்பிடமும் சிக்கித் தவித்த பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் படிப்படியாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் விமானம், ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மழையினால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் 52 பக்தர்கள் சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்ட்ரலுக்கு வந்த யாத்ரிகர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் சென்னை, கும்பகோணம், சீர்காழி பகுதிகளைச் சேர்ந்த அவர்கள், பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரகண்ட் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி நூலிலையில் உயிர் பிழைத்தது இறைவன் செயல் என்று கூறிய யாத்ரீகர்கள், தங்களின் திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கேதார்நாத்தில் தங்கியிருந்த ஹோட்டல் தங்களின் கண் முன்னாலேயே சீட்டுக்கட்டு போல சரிந்ததைப் பார்த்தோம் என்றனர். வெள்ளத்தில் மூழ்கிவிடுவோம் என்று நினைத்திருந்த நிலையில் ஆறு திசைமாறிவிட்டது என்றும் திகிலோடு விவரித்தனர். தமிழக அரசு நல்ல முறையில் பாதுகாப்பாக அழைத்து வந்து டெல்லியில் தங்க வைத்து பராமரித்ததாக பக்தர்கள் கூறினர்.
கண் முன்னாலேயே ஏராளமானோர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து இதயம் நின்றுவிட்டது என்று கூறினார் ஒரு பக்தர்.
இயற்கை ஆடிய கோரத்தாண்டவத்தில் சிக்கி மறுபடியும் மீண்டது அதிசயம்தான் என்றனர் பக்தர்கள்.
இன்னும் சில தமிழக பக்தர்கள் உத்தரகண்டில் சிக்கியுள்ளனர் அவர்கள் மீட்கப்பட்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.