தூத்துக்குடி அனல் மின் நிலைய பாய்லர், கன்வேயர் பெல்ட்டை கவனிப்பார் உண்டோ?- மீண்டும் ரிப்பேர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பழுது ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழகத்தின் மின் உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறந்த செயல்பாட்டிற்காக ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் தீ விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அனல் மின் நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பழுதுகள் சரிசெய்யப்பட்ட நிலையில் அனல் மின் நிலையம் சீராக இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் அனல் மின் நிலையத்தின் யூனிட்டுகளில் உள்ள பாய்லர்களில் அடிக்கடி ஏற்பட்ட பழுதுகள் காரணமாக மின் உற்பத்தி பணிகள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அனல் மின் நிலையத்தின் 3ம் யூனிட்டின் பாய்லர் பழுது காரணமாக மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணிகள் முழூவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.