சொய்ங்... சொய்ங்...5 பேரைக் கொன்ற கொம்பனை அடக்க ‘கும்கி’ வந்தாச்சு... பேரு ‘வனராஜா’...
ஓசூர்: ஓசூர் அருகே, கர்நாடக எல்லையில் இதுவரை 5 பேர் யானைக்கூட்டம் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று, கன்னட பத்திரிகையாளர் ஒருவரையும் யானைகள் மிதித்துக் கொன்றன. அக்காட்டியானைக் கூட்டம் பெக்களூர் மற்றும் ஓசூரில் நுழையும் அபாயம் இருப்பதாக வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த காட்டுயானைகளை அடக்க வனராஜா என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அதுபோல், நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநிலம் மாலூருக்குச் சென்ற 20 காட்டு யானைகளை , கர்நாடக வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.
இதனால், பயந்து ஓடிய யானைகள் பங்காருபேட்டை சாலை வழியாக ஓடின. அப்போது, வழியில் சிக்கிய விவசாயிகளான ஒசஅள்ளியை சேர்ந்த மல்லப்பா (60), சஜ்ஜே சப்பேனஅள்ளியைச் சேர்ந்த பாப்பண்ணா (50), உல்கூரைச் சேர்ந்த முனியப்பா (30) ஆகியோரை யானைகள் மிதித்துக் கொன்றன.
காட்டு யானைகள் தாக்கியதில், அரவேரியாவை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் கால்கள் உடைந்தன. உல்கூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு முதுகெலும்பு ஒடிந்தது. படுகாயம் அடைந்த இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்ரோஷத்தில் யானைகள்...
ஆக்ரோஷம் தணியாத காட்டு யானைகள் கூட்டம் ஒசகோட்டா சாலையில் சென்ற கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை தூக்கிப் போட்டு பந்தாடின. காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது, ஜக்குந்தியை சேர்ந்த ராமகிருஷ்ணப்பா (40) என்பவர் யானைகளின் பிடியில் சிக்கினார். அவரை யானைகள் தூக்கி வீசிக்கொன்றன.
போட்டோவா எடுக்கற...
பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அதுவும் பலிக்கவில்லை. அப்போது ‘விஜயவாணி‘ கன்னட பத்திரிகை நிருபரான ஜருகேனஅள்ளியை சேர்ந்த மஞ்சுநாத ரெட்டி (24) என்பவர் யானைக்கூட்டத்தை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். இதனால் யானைகளின் கோபம் அவர்மீது திரும்பியது. யானை தூக்கி வீசியதில், மஞ்சுநாத ரெட்டி பலியானார். இதனால், கடந்த இரு நாளில் மட்டும் யானைகள் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூருக்கும் ஆபத்து...
படிப்படியாக தனது எல்லையை விரிவாக்கி வரும் காட்டு யானைகளின் அட்டூழியத்தை ஒடுக்காவிட்டால் பெங்களூருக்கும் ஆபத்து ஏற்படலாம். இதனால் கர்நாடக வனத்துறையினர் யானை களை சிக்க திருப்பதி வழியாக ஓசூர் அருகே உள்ள பாகலூருக்கு விரட்ட முடிவு செய்து ச்யல் பட்டு வருகின்றனராம்.
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் உலகநாதன் கூறுகையில், ‘‘இந்த யானைகள் தமிழக எல்லைக்குள் நுழைந்தால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உஷார் நிலையில் உள்ளோம். யானைக்கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட நாங்களும் உதவ தயாராக உள்ளோம். பாகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம்,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சொய்ங்... சொய்ங்...கும்கி வந்தாச்சு...
துவம்சம் செய்து வரும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட, பன்னாருகட்டா தேசிய வன பூங்காவில் இருந்து வனராஜா என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டுள்ளது. வனராஜாவை வன ஊழியர்கள் டெம்போ மூலம் ராஜ மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
கும்கியால முடியலைனா...
பின்னர், வனராஜா தைலமர தோப்பில் விடப்பட்டுள்ளது. ஒருவேளை வனராஜாவால் காட்டு யானைகளை விரட்ட முடியவில்லை என்றால், அடுத்தகட்டமாக தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளை அழைத்து வர திட்டமிட்டுள்ளார்களாம் வனத்துறையினர்.
நிவாரண உதவி...
இதுகுறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ரமாநாத்ரய் கூறும்போது, ‘‘யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்கள் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.