இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது.. ஒரு டாலருக்கு 60 ரூபாய்..!
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 60-ஐத் தாண்டிவிட்டது. அதாவது, ஒரு டாலரை மாற்றினால் 60 ரூபாய் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த வாரம் 59.98 என்ற நிலை வரை போய் பின்னர் கொஞ்சம் தாக்குப் பிடித்தது ரூபாயின் மதிப்பு. ஆனால், இன்று பிற்பகலில் இதன் மதிப்பு 60.62 என்ற அளவுக்குப் போனது. பின்னர் கொஞ்சம் தேறி 60.58 என்ற நிலையை அடைந்தது.
அமெரிக்க அரசின் சில அதிரடி நடவடிக்கைகளால் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளை நிறுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்ததில் இருந்து டாலருக்கு மதிப்பு அதிகரித்துவிட்டது. அதாவது, டாலர் மீது நம்பிக்கை வைத்து அதை வாங்குவோரும், டாலர் பங்குகளில் முதலீடு செய்வோரும் அதிகரித்து விட்டனர். இதனால் டாலரின் விலை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் தங்கம் உள்ளிட்ட பிற துறைகளின் முதலீடுகளில் போடப்படும் பணம் குறைந்துவிட்டது. இதனால் தங்கத்துக்கே கூட டிமாண்ட் குறைந்து விலை சரிந்து வருகிறது.
அதே நேரத்தில் டாலரின் மதிப்பு உயர்வதால் உலகெங்கும் அதற்கு நிகரான பிற கரன்சிகளின் பாடு திண்டாட்டமாகியுள்ளது. கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றிருந்த நிலை மாறி இப்போது ஒரு டாலருக்கு 60 ரூபாய் என்ற நிலை வந்துவிட்டது.
நிலைமை இப்படியே போனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட டாலர்கள் மூலம் செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களின் விலை தாறுமாறாக உயரக்கூடும் அபாயம் உள்ளது. (கடந்த மாதம் 50 டாலர் தந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளின் விலை இப்போது 60 ரூபாயாகிவிட்டது).
இதனால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை தொடர்ந்து உயரலாம்.
இந்தியச் சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரலாமல் தடுக்க ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள டாலர் ரிசர்வை சந்தைக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஆனாலும், டாலரின் மதிப்பு உயர்வதையோ ரூபாயின் மதிப்பு சரிவதையோ கட்டுப்படுத்த முடியவில்லை.
இது உலகளாவிய விவகாரம் என்பதால் மத்திய அரசால் ஒரு அளவுக்கு மேல் ஏதும் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கும் டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் வீடுகள், நிலம், பிளாட்கள் வாங்குவதற்கு என்.ஆர்.ஐக்களிடையே சில வாரங்களாக ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், என்ஆர்ஐகளிடம் இருந்து தங்களுக்கு வரும் என்கொயரிகள் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு பக்கம் வேதனை, இன்னொரு பக்கம் சந்தோஷம்!