உத்தர்காண்ட் வெள்ளம்... முஸ்லிம்களின் மஜ்லிஸ் கட்சி சார்பில் ரூ78 லட்சம் நிவாரணம்!
ஹைதராபாத்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட இந்து யாத்ரீகர்களுக்கு ஆந்திராவின் மஜ்லிஸ் கட்சி சார்பில் ரூ78 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
உத்தர்காண்ட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகள், நிறுவனங்கள் ஏராளமாக வழங்கி வருகின்றன. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்து பக்தர்களுக்கு ஆந்திராவில் உள்ள முஸ்லிம் கட்சியான மஜ்லிஸ் கட்சி ரூ.78 லட்சம் நிவாரணத் தொகை வழங்குகிறது. மேலும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ6 லட்சம் வழங்கவும் அக்கட்சி வழங்கியுள்ளது.
அக் கட்சியின் எம்.பி. அசாவுதீன் ஒவைசி, இந்த நிதியை நாளை மறுநாள் அம்மாநில ஆளுநர் நரசிம்மனிடம் வழங்குகிறார். இதேபோல அக்கட்சியை சேர்ந்த 25 பேர் குழுவினர் உத்தர்காண்ட் மாநிலம் சென்று பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் மற்றும் நிவாரண உதவி வழங்குகின்றனர்.