புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி விடுதலை... தேர்தலில் போட்டியிடுவாரா?
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போருக்கு பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். தமிழினி அவருடைய தாயார் சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தர்சன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியின் வேட்பாளராகத் தமிழினி போட்டியிட உள்ளர் என்றும் அதற்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழினி, வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து தமிழினி எதையும் தெரிவிக்கவில்லை.
வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.