விபத்தில் மூளைச்சாவு அடைந்த 6 வயது சென்னை சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சென்னை போரூரை அடுத்து உள்ள காரம்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் லேப் டெக்னீஷியன் மதன்(30). அவரது மனைவி கோமதி. அவர்களின் மகன்கள் அனீஷ் குமார் (6), விகேஷ் குமார் (4). இதில் அனீஷ் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதன் தன் மனைவி, மகன்களோடு எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரத்தில் ஹாரிங்டன் சாலையில் வந்தபோது திடீர் என்று நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. இதையடுத்து மதன் பிரேக் போட பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. அப்போது பைக்கில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
அனீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். உடனே அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு நேற்று இரவு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவனது பெற்றோர் தீர்மானித்தனர். அனீஷின் கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கப்பட்டன.