ஸ்னோடென் மாஸ்கோ வந்தார்தான்.. நான்சென்ஸ்.. நாடு கடத்த முடியாது:யு.எஸ்க்கு புதின் காட்டம்!!
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பானது இணைய நிறுவனங்கள் உதவியுடன் அனைத்து இணைய செயல்பாடுகளையும் பிரிசம் என்ற ஆப்பரேஷன் மூலம் கண்காணித்து வருகிறது. இந்த தகவலை எட்வர்ட் ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஸ்னோடென் மீது தேசதுரோகம் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங் சென்றார். பின்னர் அங்கிருந்து தென் அமெரிக்கா நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டார். இதற்கான அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கி இணைப்பு விமானம் மூலம் சென்றார். ஆனால் அமெரிக்காவோ மாஸ்கோ விமான நிலையத்தி இறங்கும் ஸ்னோடென்னை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இதை ரஷியா நேற்று முன் தினமே நிராகரித்தது.
இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். ஸ்னோடென்னைப் பொறுத்தவரை இணைப்பு விமானத்துக்காகத்தான் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கி இருக்கிறார். அவரிடம் விமான டிக்கெட் இருக்கிறது. அவருடன் ரஷிய பாதுகாப்பு அமைப்பினர் எவரும் இணைந்து செயல்படவில்லை .ஸ்னோடென்னும் ரஷிய மண்ணில் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை அவரை ஏன் நாடு கடத்த வேண்டும். அப்படி எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை.. இந்த விவகாரத்தில் ரஷியா மீது குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது என்று பொரிந்து தள்ளிவிட்டிருக்கிறார் புதின்.
இதனிடையே ஸ்னோடென் தம்மிடம் இருக்கும் அமெரிக்கா தொடர்பான ரகசிய ஆவணங்கள் அனைத்தையும் உலகின் பல்வேறு பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த ஆவணங்களைப் இப்படி மறைத்து வைத்திருக்கிறார் என்கிறார் தி கார்டியன் செய்தியாளர் க்ரீன்வால்ட்.