ஆதரிப்பது திமுகவை.. கனிமொழியை அல்ல.. ஜெயிலுக்குப் போனாலே குற்றவாளியும் அல்ல..: காங். புது விளக்கம்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீட்சித், சிறைக்குப் போகிறவர்கள் எல்லாமே குற்றவாளிகள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கட்சியை ஆதரிப்பது என்றுதான் முடிவு செய்திருக்கிறதே தவிர ஒரு தனிநபரை அல்ல. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளப்பட்டே முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டணியை பொறுத்த வரை ஏ.கே. அந்தோணி தலைமையில் கட்சியின் தேர்தல் குழு உள்ளது. அந்த குழு மத்திய மாநில அளவில் நடைபெறும் தேர்தல்களில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பதை தேர்வு செய்து மேலிட ஒப்புதலுடன் அறிவிக்கும்.
கனிமொழிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தான் சுமத்தப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
கனிமொழியை ஆதரிக்கும் விஷயத்தில் காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறுவது சரியல்ல. காங்கிரஸ் ஜனநாயக முறையில் இயங்கும் கட்சி. அதில் பலரும் பல கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் மேலிடம் ஒரு முடிவை எடுக்கும் போது அதை மதித்து செயல்பட அனைவரும் ஓரணியில் சேருவார்கள்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தவும் இல்லை. எந்த ஒரு வேட்பாளரை ஆதரிக்கவும் இல்லை.. எங்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியையே ஆதரிக்கிறோம். நாளை வாய்ப்பு கிடைத்தால் பாரதிய ஜனதா அல்லது நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா இணைந்து கொள்வார். அதற்கு நாங்கள் திமுகவுடன் கை கோர்ப்பது பரவாயில்லை என்றார் அவர்.