மணிபால் பல்கலை எம்.பி.பி.எஸ். மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: 2 பேர் கைது
பெங்களூர்: உடுப்பி அருகே உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கும் கேரள மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 4ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கடந்த 20ம் தேதி பல்கலைக்கழக கல்லூரி நூலகத்தில் இருந்து அறைக்கு திரும்புகையில் ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 200 பேர் கொண்ட 12 தனிப்படைகளை அமைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த ஆட்டோவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 69 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று மேலும் 22 பேரை விசாரித்தனர்.
இதற்கிடையே குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று மணிபால் பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக குற்றவாளிகளை பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை போலீசார் நேற்று அறிவித்தனர். இந்நிலையில் மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் குற்றவாளிகளில் 2 பேரை இன்று கைது செய்ததுடன் மாணவியை கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். 3வது குற்றவாளி தலைமறைவாக உள்ளான்.