புளி சாதம் சாப்பிட்ட 13 வயது மகன் பலி: தந்தை-மகள் கவலைக்கிடம்
காரைக்கால்: காரைக்காலில் பள்ளிக்கு புறப்பட்ட 13 வயது மாணவர் காலை உணவாக புளிசாதம் சாப்பிட்டு பரிதாபமாக பலியானார். அவருடன் அதே உணவை உண்ட அவரது தந்தை மற்றும் மகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்கால் புளியங்கொட்டைசாலை, ஏ.எம்.நகரை சேர்ந்த சாகுல் ஹமீதுக்கு, அப்துல்லத்தீப் (14) , செய்யது யூசுபு நாச்சியாள் (13) மற்றும் பாத்திமா ஜொகரான் (8) என மூன்று பிள்ளைகள். சாகுல்ஹமீதின் மனைவி ஜெசிமா வீட்டு வேலை செய்து வந்தார்.
பணிக்கு விரைவாக கிளம்ப வேண்டும் என்பதால் முன்தினம் இரவே சமையலை செய்து வைத்து விடுவாராம் ஜெசிமா. நேற்று முன்தினமும் வழக்கம் போல், புளிசாதம் தயாரித்து வைத்துள்ளார். காலையில் பள்ளிக்கு தயாரான அப்துல்லத்தீப்க்கும், மகள் யூசுபுக்கும் காலை உணவு அளித்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார் சாகுல்.
புளிசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அக்கம்பக்கத்தினர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் அப்துல் லத்தீப் பரிதாபமாக இறந்து போனார். தொடர்ந்து சாகுல்ஹமீது மற்றும் பாத்திமா ஜொகரான் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு புளிசாதம் விஷ உணவாக மாறியது என்பது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.