ஆஸ்திரேலிய பிரதமர் கிலார்ட் ராஜினாமா: மீண்டும் பிரதமராகிறார் கெவின்ரூத்
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2010-ம் ஆண்டு பிரதமராக இருந்த இதே தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான கெவின்ரூத் பதவி விலகலை அடுத்து, ஜூலியா கிலார்டு பிரதமராக பொறுப்பேற்றார்.
தற்போது நடை பெற்று வரும் தொழிலாளர் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து வரும் செப்டம்பர் 14-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக, ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதன் விளைவாக கிலார்டு தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, 72 எம்.பி.க்களை கொண்ட முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான டோனி அபோட் கூறுகையில், 'புதிய அரசு அமையுங்கள் இல்லையெனில் பொதுத்தேர்தலை அறிவியுங்கள்' என கருத்து தெரிவித்தார்.
பிரதமரை மாற்றுவதன் மூலம் நிலைமையை சீராக்கலாம் என எண்ணிய தொழிலாளர் கட்சி , கட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நேற்று நடத்தியது. இத்தேர்தலில் தற்போதைய பிரதமரை எதிர்த்து முன்னாள் பிரதமர் கெவின் ருத் போட்டியிட்டார். மொத்தம் 150 எம்.பி.க்கள் உள்ள நிலையில், மக்கள் பிரதிநித்துவ சபையில் வைத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான கெவின்ரூத்திற்கு ஆதரவாக 57 ஓட்டுக்களும், கிலார்டுக்கு ஆதரவாக 45 ஓட்டுக்களும் கிடைத்தன.
குறைவான ஓட்டுகளே கிடைத்ததால் கிலார்டு பதவி விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அதிக ஓட்டுகள் பெற்ற கெவின்ரூத் மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் பிரதமராக பதவி ஏற்க உள்ள கெவின்ரூத் உரையாற்றுகையில், ‘ ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடைபெறும்' என அறிவித்தார்.