உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து…
கேதார்நாத்: உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ஹெலிகாப்டர், இன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.
கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, ஹர்சில் என்ற இடத்தில் தரையிறங்கும்போதே இன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி சேதமடைந்ததாக விமானப்படை செய்தி தொடர்பாளர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தானர்தான் இதேப்போன்று உத்தரகாண்டில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள். அதன் தாக்கம் மறைவதற்குள் மீண்டும் மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அனைவரையும் மீட்போம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்கும் வரை ராணுவம் அங்கிருந்து வெளியேறாது என்று ராணுவ தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். உத்தர்கண்டில் மீட்பு பணிகளின் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகின்றன. டேராடூனில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி, ராணுவ தளபதி பிக்ரம் சிங், உத்தர்கண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுணா மற்றும் உயரதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவத் தளபதி, மீட்பு பணிகளில் 8 ஆயிரத்து 500 ராணுவ வீரரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தவிர இந்தோ-திபெத் படையினர், விமான படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீட்பு பணிகளில் ராணுவத்தினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளாக பாராட்டு தெரிவித்த பிக்ரம் சிங், வானிலையை பொறுத்தே மீட்பு பணிகளை நிறைவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.