இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்: குற்றப் பத்திரிக்கையில் ஐபி இயக்குநர் பெயர்: சிபிஐ- உள்துறை மோதல்
டெல்லி: இளம் பெண் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்திரகுமாரின் பெயரை சேர்ப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ இடையே மோதல் உருவாகியுள்ளது.
கடந்த 20004ம் ஆண்டு அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட ஐந்து பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இஷ்ரத் ஜகானும், அவருடன் இருந்தவர்களும் ஏன் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும் முயற்சியில் சிபிஐ தீவிரம் காட்டுமாறும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இஷ்ரத் வழக்கில் ஐபி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் சிபிஐ அதிகாரிகளால் 2வதுமுறையாக விசாரிக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயரை சேர்த்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் நினைத்துள்ள நிலையில், அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே ராஜேந்திர குமாரின் பெயரை சேர்க்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் ஜூலை 4ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.