தகவல் பெறும் உரிமை சட்டம்.. அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை!
டெல்லி: தகவல் பெறும் உரிமை சட்ட வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் உள்ளிட்டோர் மத்திய தகவல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அரசியல் கட்சிகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தாங்கள் அரசின் நிதி உதவியுடன் செயல்படவில்லை என்றும், தாங்கள் பொது அமைப்புகள் அல்ல என்றும், அதனால் தங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை செயலற்றதாக ஆக்குவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த அவசர சட்டத்தில், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், ‘பொது அமைப்பு' என்ற வார்த்தைக்கான விளக்கத்தை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.