உத்தரகாண்ட்: உயிரை காப்பாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் ஹிமாலய சுனாமியில் சிக்கி தவித்தபோது அவர்களை மீட்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் நிறுவன ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளனது.
உத்தரகண்ட் மாநில அரசு சார்பில் சாரதி ஏர்வேஸ் என்ற தனியார் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மலையில் சிக்கித்தவித்த யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் யாத்ரீகர்கள் ஒவ்வொருவரிடமும் 3 லட்சம் ரூபாய் வரை தனியாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இதனை கண்டறிந்துள்ளது.
இது அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை மீறிய செயல் என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் குலாப் சிங் தன்வார், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் நெருங்கிய நண்பர் ஆவார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கேட்ட விவகாரம் நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்கள் ரூ.20 லட்சம் வரை இந்த ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தனியாக கட்டணம் வசூலித்த ஹெலிகாப்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அஜித் சிங், உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.