திருவண்ணாமலை கோயில் கும்பாபிஷேகம் 2014ல் நடத்த முடிவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆன்மீக சாஸ்திர சம்பிரதாயம்.
இதனையடுத்து அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்த கும்பாபிஷேகம் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வை நடத்தச்சொல்லி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் உத்தரவிட அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன்படி அண்ணாமலையார் கோயில், துர்க்கையம்மன் கோயில், கிரிவலப்பாதையில் உள்ள ஒரு பழைய கோயில் என மூன்று கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. 2014 இறுதிக்குள் கும்பாபிஷேக, பாலாபிஷேக பணிகள் நடத்தி முடிக்க திட்டமிடப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நான்கு கோபுர நுழைவாயில்களையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டது இக்கோயில். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளுர், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு என வருகை புரிகின்றனர்.
மலையையே கடவுளாக வணங்கும் ஊர் இது. ஆண்டு முழுவதும் திருவிழா உள்ள மிக முக்கிய திருக்கோயில் இது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 14 நாட்கள் கோலகலமாக தீபத்திருவிழா நடைபெறும். மாதந்தோறும் பௌர்ணமியன்று மட்டும் 5 லட்சத்துக்கும் குறையாத மக்கள் மலையை கிரிவலம் வருகின்றனர்.