சம்மனை ரத்து செய்யக் கோரி அப்பீல் செய்கிறார் தயாளு அம்மாள்
முதலில் மே 6ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் இது ஜூலை 8ம் தேதியாக மாற்றப்பட்டது. இருப்பினும், தயாளு அம்மாளுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதாலும், டெல்லிக்கு பயணம் செய்யக் கூடிய வகையில் அவரது உடல் நிலை இல்லை என்றும், எனவே அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தயாளு சார்பில் சிபிஐ கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த டெல்லி சிபிஐ கோர்ட், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் அளவுக்கு தளர்வற்ற நிலையில் தயாளு இருக்கிறார் என்று மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டு தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த மே 31-ஆம் தேதி சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். மருத்துவமனை சோதனைகளுக்குப் பிறகும் இப்படி உத்தரவிட்டால், டெல்லி வரும்போது தயாளு அம்மாளுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று அவர் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தயாளு அம்மாள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பூர்வாங்க வேலைகளை டெல்லியில் இருந்தபடி கனிமொழி பார்த்து வருகிறார். ஓரிரு நாட்களில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும்.