எஸ்.ஐயுடன் காதல்.. குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் ஜாமீனில் விடுதலை
திருப்பூர்: எஸ்.ஐ. உமாமகேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜ். வழக்கறிஞரான இவர் கன்னியாகுமரியில் பயிற்சி பெற்றார். பொள்ளாச்சி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் எஸ்ஐ உமாமகேஸ்வரி. எம்ஏ., எம்காம்., படித்துள்ளார். 2004ல் போலீஸ் பணிக்கு சேர்ந்த அவர், 2011ல் பயிற்சி எஸ்.ஐயாக கன்னியாகுமரியில் பணியாற்றினார். அப்போது தங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். பின், தங்கராஜ் பதவி உயர்வு பெற்று குன்னூர் வந்தார். அவருக்காக எஸ்ஐ உமாமகேஸ்வரியும் பணிமாறுதல் வாங்கி கடந்த 6 மாதங்களுக்கு முன் பல்லடம் வந்துள்ளார்.
தங்கராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு எஸ்ஐ வலியுறுத்தியுள்ளார். அதற்கு தங்கராஜ், எனக்கு மாஜிஸ்திரேட் பதவி உயர்வு கிடைத்துள்ளது. எனவே, 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறினாராம். தன்னுடன் இருந்த தொடர்பு குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால்தான் கோபமடைந்த உமா மகேஸ்வரி மாஜிஸ்திரேட் மீது மோசடி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தங்கராஜ், அவரது தந்தை செம்பன், தாய் காவிரி, நண்பர் பிரகாஷ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தங்கராஜை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
உறவினர்கள் மிரட்டல்
தங்கராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கூறிக் கொண்டு சிலர் எஸ். ஐ. உமாமகேஸ்வரியை தொடர்பு கொண்டு மிரட்டி வருகின்றனராம். ரூ.30 லட்சம் பணம் தருகிறோம் வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறியதாக தெரிகிறது. என்னை ஏமாற்றிய தங்கராஜுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் உமா மகேஸ்வரி.
இந்த நிலையில் ஜாமீன் கோரி திருப்பூர் நீதிமன்றத்தில் தங்கராஜ் மனு தாக்கல் செய்தார். மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, தங்கராஜூக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.