மரியாதையா ஓடிப் போயிருங்க.. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விஜயகாந்த் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மிரட்டல்
சென்னை: அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படக்கூடிய 7 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தலைமை நீக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தானாகவே விலகி செல்ல வேண்டும். கட்சியை விட்டு தலைவர் நீக்குவதற்கு முன் நீங்களே விலகி ஓடுங்கள். அப்படி செல்வதுதான் மரியாதை என்று விஜயகாந்த் ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தேமுதிகவைச் சேர்ந்த சுந்தரராஜன், மைக்கேல் ராயப்பன், மாபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் பாண்டியன், சாந்தி, சுரேஷ் குமார் ஆகியோர் அங்கிருந்து தாவி அதிமுகவுக்குஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதையடுத்து அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்பு
தேமுதிகவின் இந்த நடவடிக்கையை கிண்டலடித்தும், நக்கலடித்தும், மகிழ்ச்சி தெரிவித்தும் கருத்து தெரிவித்துள்ளனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.
பெர்மனென்ட்டா நீக்குங்க பாஸ்
அத்தோடு நில்லாமல், ஏன் சஸ்பெண்ட் பண்ணீங்க.. பேசாமல் நிரந்தரமாக நீக்கி விட வேண்டியதுதானே என்றும் அவர்கள் கேட்டு தேமுதிகவினரை டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளனர்.
எப்பவுமே பாஸ் லேட்தான்
அதிலும் மைக்கேல் ராயப்பன் பேசுகையில், எங்கள் தலைவர் எப்போதுமே லேட்தான் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று விஜயகாந்த்தை ஓவராகவே வாரியுள்ளார்.
பார்த்திபனின் ஆவேச பதிலடி
இவர்களுக்கு தற்போது விஜயகாந்த் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபன் கூறுகையில், துரோகிகளுக்கு வரலாற்றில் என்றுமே இடம் இல்லை. ராமபிரான் சில துரோகிகளை சந்தித்ததால் இந்து மக்களின் காவியமானார். இயேசு பிரான் சில துரோகிகளை சந்தித்தார். உலக கிறிஸ்தவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். நபிகள் நாயகம் சில துரோகிகளை சந்தித்தார். இஸ்லாம் இன மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். வரலாறு படைக்கவே இறைவன் துரோகிகளை அனுப்புகிறார். கேப்டன் விஜயகாந்தும் வரலாறு படைப்பார்.
அழிஞ்சு போயிருவீங்க
தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். தொண்டர்கள் நலனுக்காக பொருள் அனைத்தையும் இழந்தவர். நம்பிக்கை துரோகிகள் வரலாறு ஆவதில்லை. பெருந்தலைவர் காமராஜர், அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் சந்திக்காத துரோகிகள் இல்லை. இவர்களை எதிர்த்தவர்கள் அழிந்து போனார்கள். ஆனால் இந்த தலைவர்கள் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். அந்த வகையில் விஜயகாந்தும் மக்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
காலம் பதில் சொல்லும்ய்யா...
முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி கொடுத்து தங்களை யார் என்று அடையாளம் காட்டியவர். கேவலம் பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய இவர்களிடம் உண்மை, தர்மத்தை எதிர் பார்க்க முடியாது. காலம் அவர்களுக்கு சரியான பதில் சொல்லும் என்றார் கோபமாக.
நல்ல தம்பி சொல்வது என்னவென்றால்....
எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி கூறுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பிரச்சினையை பற்றி முதல்வரிடம் பேசியதாக கூறினார்கள். நான் என் தொகுதி பிரச்சினை குறித்து கூறினால் எதுவும் கேட்கவில்லை. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க் களின் தொகுதிகள் வேறு மாநிலத்திலா இருக்கிறது. எங்களுக்கும் அவர் தானே முதல்வர். எங்கள் தொகுதியை புறக்கணிக்கிறார்கள்.
என்னையும் மதித்தவர் விஜயகாந்த்
நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன். நான் எம்.எல்.ஏ. பதவி கனவு கண்டதில்லை. ஆனால் என்னையும் மதித்து எங்கோ இருந்த என்னை இந்த அளவிற்கு உயர்த்தியவர் கேப்டன் விஜயகாந்த். பொதுவாக தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு சொத்து மற்றும் கல்வி தகுதியை பார்ப்பார்கள். ஆனால் மக்கள் பணி செய்வதை ஒன்றையே பார்த்து என்னை நியமனம் செய்தார்.
பாடம் புகட்டுவோம்
நான் எப்போது நினைத்தாலும் அவரை சந்தித்து பேசுவேன். என் தொகுதியில் எதுவும் செய்யாதது என்னை புறக்கணித்ததாக அர்த்தமல்ல. தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை புறக்கணிப்பதாகும். பணத்துக்காக சென்ற சிலரை போல நாங்கள் அல்ல. என்னுடைய இறுதி சடங்கு இந்த கட்சியில்தான் நடக்கும். கேப்டன் காலடியில் தொடர்ந்து பணியாற்றுவோம். துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்.
ஓடிப் போயிருங்க...
திருச்செங்கோடு எம்.எல்.ஏ சம்பத் கூறுகையில், அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படக்கூடிய 7 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தலைமை நீக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தானாகவே விலகி செல்ல வேண்டும். தொகுதி பிரச்சினையை தீர்க்க போவதாக கூறியவர்கள் அதிமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டார்கள். கட்சியை விட்டு தலைவர் நீக்குவதற்கு முன் நீங்களே விலகி ஓடுங்கள். அப்படி செல்வதுதான் மரியாதை என்றார் வேகமாக.