பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 சகோதரிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியான கில்கிட்டில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் நூர் ஷெசா(16), நூர் பஸ்ரா(15). சகோதரிகளான அவர்கள் கடந்த வாரம் மழை பெய்தபோது தங்கள் பங்களாவுக்கு வெளியே மழையில் நடனமாடினர். அவர்களுடன் 2 குழந்தைகளும் ஆடினர். இதை அவர்கள் வீடியோ எடுத்து வைத்தனர்.
அந்த வீடியோ செல்போன் மூலம் நகர் முழுவதும் பரவ பெரும் பிரச்சனையாகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய 5 பேர் அவர்களின் பங்களாவுக்கு வந்து சகோதரிகள் இருவர் மற்றும் அவரது தாயை சுட்டுக் கொன்றனர்.
குடும்ப கௌரவத்தை கெடுத்ததாகக் கூறி அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சகோதரிகளின் மாற்றான் தாய் மகனான குத்தூர் என்பவர் இந்த கொலைக்கு பின்னால் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் குத்தூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 4 பேர் மீது அந்த சிறுமிகள் சகோதரர் புகார் கொடுத்துள்ளார்.