நர்சிங் கல்லூரிகளில் லஞ்சம் வாங்கி, ரூ200 கோடிக்கும் மேல் சொத்து குவித்த ‘கம்பவுண்டர்’ கைது
ஜெய்ப்பூர்: நர்சிங் கல்லூரிகளிடம் லஞ்சம் வாங்கி ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்து சேர்த்துள்ள ஜெய்ப்பூர் ஆஸ்பத்திரி கம்பவுண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1983-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஆஸ்பத்திரியில், கம்பவுண்டராக வேலைக்கு சேர்ந்த மகேஷ் சந்த் சர்மா, கடந்த மே மாதம் முதல் இந்திய நர்சிங் கவுன்சில் ஆலோசகர் பணியில் உள்ளார். நர்சிங் கல்லூரிகள், பல்வேறு அங்கீகாரத்துக்காக மகேஷ் சந்த் சர்மாவை அணுகும் பட்சத்தில் அவைகளிடமிருந்து லஞ்சத்தை வாங்கிக் குவித்துள்ளார் மகேஷ். அவ்வாறு, கேட்ட லஞ்சத்தை தர மறுக்கும் கல்லூரி அதிபர்களிடம், நர்சிங் கவுன்சில் குழு சோதனைக்கு வரும் என்று மிரட்டியும் உள்ளார்.
கடந்த ஆண்டே, கம்பவுண்டர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற மகேஷ் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அதற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆயினும், கம்பவுண்டர் பணிக்கு மகேஷ் சென்றே பல நாட்கள் ஆகிறதாம்..
இந்நிலையில், மானசரோவரில் உள்ள நர்சிங் கல்லூரி அதிபர் ரமேஷ் சந்த் சர்மா என்பவர், தனது நர்சிங் கல்லூரியில் புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாக மகேஷ் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து, மகேஷைக் கண்காணித்த லஞ்சச் துறையினர், அவரைக் கையும் களவுமாக பிடித்தனர்.
மகேஷுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி, ராஜேந்திர சைனி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் வேண்டுகோளின் படி, விசாரணைக்காக 5 நாள் போலீஸ் காவலில் உள்ளார் மகேஷ்.
மகேஷ் சர்மாவின் வீட்டை சோதனையிட்ட போது, 25 நர்சிங் கல்லூரிகளில் மகேஷ் பங்குதாரராக இருப்பதும், மானசரோவரில் உள்ள ஆர்.ஏ.ஜி. ஆஸ்பத்திரியை 3 மாதங்களுக்கு முன்பு ரூ.22 கோடிக்கு விலைக்கு வாங்கியதும் தெரிய வந்தது. மேலும், ஜெய்ப்பூரில் ஏராளமான வீடுகளை வாங்கி குவித்துள்ள மகேஷ்,பண்ணை இல்லம், சொகுசு ஓய்வு விடுதி போன்றவற்றையும் வாங்கி உள்ளார். அவர் பெயரிலும், அவருடைய மனைவி மீனா தேவி பெயரிலும் ரூ.200 கோடிக்கு மேல் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்உ வருகின்றனர்.
மகேஷ்-ன் வங்கி கணக்குகள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. மகேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி லாக்கர்களை ஆராயும் போது, இன்னும் பல அதிர்ச்சிகள் வெளிவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மகேஷ் கைதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் உள்பட பல இடங்களில் உள்ள 9 நர்சிங் கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சில கல்லூரிகள், ‘சீல்' வைக்கப்பட்டுள்ளன.
மேலும் விசாரணையில், மகேஷ் இந்திய நர்சிங் கவுன்சிலின் தலைவர் டி.திலீப் குமாரின் இடைத்தரகர் என தெரிவித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கை வெளியாவதற்கு முன் தகுந்த ஆதாரங்களை திரட்டி அவரையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.