புதிய வெளியுறவுத் துறைசெயலராக சுஜாதா சிங் நியமனம்!
மத்திய வெளியுறவுத் துறை செயலரான ரஞ்சன் மத்தாய் பதவிக் காலம் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வெளியுறவுத் துறைச் செயலர் யார் என்ற யூகங்கள் எழுந்தன. சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கரை வெளியுறவுச் செயலராக பிரதமர் நியமிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியுறவுத் துறையில் பணிமூப்பு அடிப்படையில் பலர் இருக்க அவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதேபோல் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஜைமினி பகவதி, மேற்கு பிராந்திய செயலர் சுதிர் வியாஸ், வெளியுறவு அமைச்சக பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி ஆகியோரது பெயர்களும் புதிய வெளியுறவு செயலர் பதவிக்கு அடிபட்டன.
இந்நிலையில் ஜெர்மனுக்கான இந்திய தூதர் சுஜாதாசிங்கை புதிய வெளியுறவுத் துறை செயலராக நியமித்து பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள் சுஜாதா சிங்!
ஐபி எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவரும் சிக்கிம், மேற்குவங்கம், உத்தரபிதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் பதவி வகித்தவர் டி.வி. ராஜேஸ்வர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள்தான் சுஜாதா சிங். ராஜேஸ்வரின் 60வது ஆண்டு திருமண நிகழ்ச்சியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார். சுஜாதாசிங்கின் கணவர் சஞ்சய்சிங், வெளியுறவுத் துறையில் கிழக்கு பிராந்திய செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.