அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்காக விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்
விழுப்புரம்: என்.எல்.சி பங்குவிற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திடீரென வாபஸ் பெறப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து கலவரக்காரர்களை கைது செய்ய கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுடன் விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தினர். இதற்காக ராமதாஸ் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமதாஸ் கைதை தொடர்ந்து வடமாவட்டம் முழுக்க பா.ம.க.வினர் வன்முறையில் இறங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 2ஆம் தேதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 60 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது.
என்.என்.சியின் 5 சதவிகித பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலும் தடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தான் இந்த 144 தடை உத்தரவு நேற்றிரவு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.