4ம் தேதி பெரம்பலூரில் சமுதாய நல அறக்கட்டளையின் 4வது கிளை துவக்கம்
பெரம்பலூர்: ஈடிஏ குழும நிறுவன அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட சமுதாய நல அறக்கட்டளையின் 4வது கிளை வரும் 4ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டை மையமாகக் கொண்டு துவங்கப்படுகிறது.
ஈ.டி.ஏ. குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் செய்யது எம்.ஸலாஹுத்தீனின் நெறிகாட்டலில் ஈ.டி.ஏ.குழும நிறுவனங்களின் மேலதிகாரிகளால் எம்.அக்பர்கான் அவர்களை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமுதாய நல அறக்கட்டளை (Community Welfare Trust) மருத்துவச் சேவையை மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறது.
ஒரு மருத்துவர், ஒரு செவிலி, ஒரு மருந்தாளுநர், ஓர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழு தினமும் இலவச நடமாடும் மருத்துவமனை (Mobile Medical Care Unit) மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாத குக்கிராமங்களுக்குச் சென்று சாதி, சமய, இனப் பேதமற்று மக்களுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து இலவசமாகவே மருந்துகளும் அளித்து வருகின்றது.
இதுவரை நெல்லை மாவட்டத்தில் 30 குக்கிராமங்களில் 25,000 பேர், இராமநாதபுரம் மாவட்டத்தில் 27 குக்கிராமங்களில் 6,000 பேர், பெங்களூரு இராமநகரத்தில் 7,000 பேர் பயன் பெற்றுள்ளனர். இதன் 4வது கிளை வரும் 4ம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் லெப்பைக்குடிகாட்டை மையமாகக் கொண்டு சமுதாய நல அறக் கட்டளையின் மருத்துவத் தொண்டு தொடங்கவுள்ளது.