புதுச்சேரி ஆளுநராக கடாரியா நியமனம்... இக்பால் சிங் மாற்றம்; மேலும் 3 கவர்னர்களும் மாற்றம்
ஹவாலா மன்னன் ஹாசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்குவதற்கு பரிந்துரை செய்து சர்ச்சையில் சிக்கியவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்.
தற்போது, இக்பால் சிங் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய ஆளுநராக முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரான விரேந்திரா கடாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாநில ஆளுநர்கள்
டெல்லி, மேகாலையா, அந்தமான் நிக்கோபார் தீவிற்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த தெஜந்திர கண்ணா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, டெல்லி உள்ள ஜாமிய மில்லியா இஸ்லாமிய மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய நாஜீப் ஜங் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேகாலையாவின் ஆளுநராக இருந்த ரஞ்சித் ஷேக்ஹர் மூஷாஹரி பதிலாக டாக்டர் கே.கே.பால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஆளுநராக இருந்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் போபிந்தர் சிங்கிற்கு பதிலாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 ஆளுநர்களும் இன்னும் இருதினங்களில் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.